உள்ளூர் செய்திகள்
நஞ்சை தரிசில் பயிறு வகை பயிர்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்.

நஞ்சை தரிசில் பயிர்கள் சாகுபடி குறித்து பிரசாரம்

Published On 2022-01-22 08:46 GMT   |   Update On 2022-01-22 08:46 GMT
திருத்துறைப்பூண்டியில் நஞ்சை தரிசில் பயிர்கள் சாகுபடி குறித்து பிரசாரம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் சம்பா தாளடி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளை நஞ்சை தரிசில் உளுந்து, பச்சைபயறு போன்ற பயிர்களை சாகுபடி செய்ய வலியுறுத்தி வாகனங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 

பிரசார வாகனத்தை தொடங்கி வைத்து முத்துப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முனைவர் பார்த்தசாரதி பேசும்போது,

முத்துப்பேட்டை வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 13 ஆயிரத்து 500 எக்டர் நிலப்பரப்பில் சம்பா தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

நெல் அறுவடைக்கு 5 முதல் 7 நாட்களுக்கு முன்னர் வயல்கள் மெழுகு பத அளவில் ஈரம் உள்ள நிலையில் நஞ்சை தரிசு பயிராக விவசாயிகள் உளுந்து மற்றும் பச்சை பயறு போன்ற விதைகளை விதைத்து சாகுபடி செய்யும் பொருட்டு வாகனம் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது.

விவசாயிகள் குறைந்த செலவில் நிறைந்த வருமானம் பெறவும், 
மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், குறைந்த அளவு தண்ணீரை 
கொண்டு கோடை பருவத்தில் விவசாயம் செய்யும் பொருட்டும் 
உளுந்து மற்றும் பச்சைபயறு விதைகளை நஞ்சை தரிசில் விதைத்து 
சாகுபடி செய்யலாம். 

உளுந்து விதைகளை முத்துப்பேட்டை, உதயமார்த்தாண்டபுரம், 
எடையூர் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிலோ ஒன்றுக்கு ரூ.48 மானியத்தில் வாங்கி விதைப்பு செய்து பயன் அடையலாம் என்றார்.

இந்நிகழ்வில் முத்துப்பேட்டை துணை வேளாண்மை அலுவலர் கார்த்திகேயன், ஆத்மா தொழில்நுட்ப வட்டார மேலாளர் சுரேஷ், துணை வட்டார மேலாளர் பன்னீர்செல்வம், தோலி ஊராட்சி மன்ற தலைவர் இலக்குவன், முன்னோடி விவசாயி லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News