உள்ளூர் செய்திகள்
உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் சி.சி.டி.வி., கேமரா மூலம் பதிவு - அதிகாரி தகவல்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாரபட்சமின்றி அமல்படுத்த வேண்டும்.
திருப்பூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துகிற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் பிரிவு தாசில்தார் முருகதாஸ், வேட்புமனு தாக்கல் செய்வதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நாளில் வேட்பாளர் அல்லது முன்மொழியும் நபர் இதில் ஒருவர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்ய முடியும். வேட்புமனுத்தாக்கல் நடக்கும் அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் இரண்டு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, தகுதியான வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கீடு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு என அனைத்து பணிகளும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் முழுமையாக பதிவு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாரபட்சமின்றி அமல்படுத்த வேண்டும்.
வேட்புமனுத்தாக்கல் முன்னேற்பாடுகள், மனுக்கள் பரிசீலனை, பிரசாரத்தின் போது தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவது, ஓட்டுப்பதிவுக்கான முன்னேற்பாடுகள், ஓட்டுச்சாவடிகள் தயார்படுத்துதல், ஓட்டுப்பதிவு நடவடிக்கைகள், ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும் ஓட்டுப்பெட்டிகள் சீல் வைத்து தயார் செய்து ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைப்பது வரையான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.