உள்ளூர் செய்திகள்
அமைச்சர் சேகர்பாபு

இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் முன் மாதிரி முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

Published On 2022-01-22 08:13 GMT   |   Update On 2022-01-22 08:13 GMT
இந்தியாவிற்கே முன் மாதிரி முதல்வராக நமது தமிழக முதல்வர் திகழ்கிறார் என்பது நாமெல்லாம் பெருமைகொள்ள வேண்டியவை என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
ராயபுரம்:

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வடசென்னையில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளின் வெற்றிக்கு பாடுபட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட பொறுப்பாளர் தா.இளைய அருணா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு கைக்கடிகாரம் வேட்டி சட்டை புடவை தொகுப்புகள் அடங்கிய பரிசுகளை வழங்கி பேசியதாவது:-

அரசியல் அரங்கில் பல பேர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தங்களது நிலையை மாற்றிக் கொள்வார்கள். தங்களுக்கு ஏதோ வானளாவிய அதிகாரம் வந்து விட்டது போல எண்ணுவார்கள். ஆனால் நமது தமிழக முதல்வர் அதில் இருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டவர்.

ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகும்கூட மக்களிடம் நெருங்கி பழக கூடிய வகையில் மிகவும் எளிமையாக உள்ளார்.

அதேபோல் திட்டங்களை நிறைவேற்றுவதில் வலிமை மிக்கவராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் தனது அயராத உழைப்பால் தி.மு.க தொண்டர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார்.

உதாரணத்திற்கு ஒன்றே ஒன்றை சொல்ல வேண்டுமென்றால் இந்து சமய அறநிலையத் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 1927-ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றபோது இந்து சமய அறநிலையத்துறை துவக்க பட்டிருந்தாலும்,

1959-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு என தனி சட்டம் வகுக்கப்பட்டு, அதன்படி செயல்பட துவங்கி இருந்தாலும், வரலாற்றிலேயே முதன்முறையாக இந்து சமய அறநிலையத்துறையின் மைய அலுவலகத்தில் நடைபெற்ற உயர்நிலை செயல்திட்ட கூட்டத்தில் தமிழக முதல்வரே நேரில் வந்து பங்கேற்று, சுமார் 1½ மணி நேரம் அக்கூட்டத்தில் பங்கேற்று அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்து மேலும் அதற்கான விளக்கங்களையும் எடுத்துரைத்தார்.

மேலும் அங்கு பங்கேற்ற அனைவரிடமும் நீங்கள் அறநிலையத்துறை வளர்ச்சி பணிகள் சம்பந்தமாக எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார். தமிழக முதல்வர் இத்தகைய சீர்மிகு செயல்பாடுகள் மூலம் இந்துசமய அறநிலையத்துறையில் ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழக முதல்வர் என்றென்றும் நம் நினைவில் நிறைந்திருக்கும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், சிந்தாமல் சிதறாமல் கட்டிக் காத்து வருகிறார். தமிழக முதல்வரின் உழைப்பையும் நிர்வாகத் திறமையையும், ஆன்மீகவாதிகளும் புகழ்கிறார்கள், அண்டை மாநில முதல்வர்களும் மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுகிறார்கள்.

இத்தகைய பாராட்டுக்களின் மூலம் இந்தியாவிற்கே முன் மாதிரி முதல்வராக நமது தமிழக முதல்வர் திகழ்கிறார் என்பது நாமெல்லாம் பெருமைகொள்ள வேண்டியவையாகும்.

இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசினார்.

நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி எம்எல்ஏக்கள் ஐடிரீம்.மூர்த்தி ஜே.ஜே.எபிநேசர் உட்பட பல தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News