உள்ளூர் செய்திகள்
மூதாட்டி வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் மோசடி
தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் மூதாட்டி வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் அபேஸ் செய்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மொரப்பூர்:
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அண்ணல் நகரை சேர்ந்தவர் பெருமி (வயது60), இவரது மகன் மகேந்திரன் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் கடந்தாண்டு மே மாதம் 14-ந் தேதி இறந்து விட்டார். மகேந்திரன் எல்.ஐ. சி. பாலிசி எடுத்து இருந்தார். மகேந்திரன் இறந்ததால் எல்.ஐ.சி. பாலிசி பணம் அவரது தாய் பெருமிக்கு மொரப்பூரில் உள்ள ஒரு வங்கி கிளையில் உள்ள அவரது வங்கி கணக்கிற்கு வந்துள்ளது.
இந்த நிலையில் வீடு கட்ட வாங்கிய கடனை கொடுக்க வேண்டும் எனக்கூறி மகேந்திரனின் மனைவி அருணாவின் தம்பி சக்திவேல் (27) என்பவர் பெருமியை அந்த வங்கிற்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி மொரப்பூர் வங்கிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது காசோலையில் கையெழுத்து வாங்கி ரூ.5- லட்சம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். அதன்பின் போலியாக கையெழுத்திட்டு, மூன்று லட்சம் ரூபாய் வங்கியில் இருந்து பணம் எடுத்துள்ளார்.
இந்த விபரம் பெருமிக்கு தகவல் தெரியவந்தது.
இது குறித்து பெருமி மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் சக்திவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.