நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கல்லுரி பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியம். இவரது மகள் மரிய ஜென்ஸ்லின் (வயது 27). முதுநிலை பட்டதாரியான இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
மரியஜெஸ்லின் தனது உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வருடமாக காத்திருந்த அவரது காதலன் சமீபத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.