உள்ளூர் செய்திகள்
ராமதாஸ்

பா.ம.க. வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

Published On 2022-01-21 07:20 GMT   |   Update On 2022-01-21 07:20 GMT
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உன்னத இலக்கை எட்டுவதற்கான பணிகளை பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலர்கள் தொடங்கி கடைநிலைத் தொண்டன் வரை அனைத்து நிலை நிர்வாகிகளும் இன்றிலிருந்தே தொடங்க வேண்டும் என்று ராமதாஸ் தொண்டர்களுக்கு கூறி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் சுமார் 5½ ஆண்டுகள் தாமதமாக அடுத்த மாதம் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரக உள்ளாட்சிகளின் ஒரு பகுதிக்கு மூன்று ஆண்டு களும், மற்ற பகுதிகளுக்கு ஐந்து ஆண்டுகளும் தாமதமாக தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தின் கெடுபிடி காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு அரசு ஆளாகியிருக்கிறது.

அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கவும், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் இணைக்க வேண்டிய ஆவணங்களை தயாரிக்கவும் தேவையான அவகாசம் அளிக்க வேண்டும் என்பது தான் இடைவெளி அளிக்கப்படுவதன் நோக்கம்.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்போது இத்தகைய அவகாசத்தை எதிர்பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்தாலும், அ.தி.மு.க. ஆட்சி நடந்தாலும் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நேரத்திற்கும், வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நேரத்திற்கும் இடையே அதிகபட்சமாக 36 மணி நேரம் இருந்தாலே அதிசயம். காரணம் ஆளுங்கட்சி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு தேர்தலை சந்திக்க முன்கூட்டியே தயாராகி விடும்.

எதிர்க்கட்சிகளுக்கு போதிய நேரம் இருக்காது என்பதால் தேர்தலை எதிர்கொள்ள தடுமாற வேண்டும் என்ற எண்ணம் தான். இதை எதிர்க்கட்சி விமர்சித்தாலும் கூட, அது மீண்டும் ஆளும் கட்சியாகும் போது இதே அணுகுமுறையைத் தான் கடைபிடிக்கும். இதே ஆளுங்கட்சி ஆதரவு அணுகுமுறை தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை தொடரும். அதை நாம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்பதைக் கடந்து, அவற்றையெல்லாம் சமாளித்து தான் வெற்றிகளை குவித்தாக வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 12,820 இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும்; வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

உள்ளாட்சிகளில் நல்லாட்சியை நம்மால் தான் வழங்க முடியும். நகர்ப்புற உள்ளாட்சிகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சியிடம் பல சிறப்புத் திட்டங்கள் உள்ளன. அவற்றையும் தமிழகத்தை தற்போது ஆட்சி செய்யும் திமுக அரசின் தவறுகள், தோல்விகள், முந்தைய அதிமுக அரசின் மீதான விமர்சனங்கள், எதிர்க்கட்சியாக மக்கள் பணியாற்றத் தவறியது ஆகியவற்றை மக்கள் மன்றத்தில் முன்வைத்து பரப்புரை செய்ய வேண்டும். மக்களின் வளர்ச்சிக்கான நமது செயல்திட்டங்களை விளக்கிக் கூறினாலே அவர்களின் வாக்குகளை பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த பிறகு நானும், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ம.கவின் மூத்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் பரப்புரை செய்யவிருக்கிறோம். அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். 2022-ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் நமது ஒற்றை இலக்கு அதிக இடங்களில் வெற்றிகளை குவித்து நகர்ப்புறங்களை நமது வசமாக்க வேண்டும் என்பது தான்.

இந்த உன்னத இலக்கை எட்டுவதற்கான பணிகளை பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலர்கள் தொடங்கி கடைநிலைத் தொண்டன் வரை அனைத்து நிலை நிர்வாகிகளும் இன்றிலிருந்தே தொடங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு பாட்டாளிகள் அனைவரையும் நான் சந்திக்கும் நிகழ்வு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி விழாவாகவே இருக்க வேண்டும். அதற்காக கடுமையாக உழையுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News