உள்ளூர் செய்திகள்
ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் வலுவூட்டும் பயிற்சி

ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் வலுவூட்டும் பயிற்சி

Published On 2022-01-20 09:22 GMT   |   Update On 2022-01-20 09:22 GMT
திருவாரூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் வலுவூட்டும் பயிற்சி நடைபெற்றது.
திருவாரூர்:

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அனைத்து 
பள்ளிகளுக்கும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் வலுப்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் 1 முதல் 5 வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.

மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் தொடக்கப்பள்ளிகளை ஒருங்கிணைத்து அதனருகில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் ஹைடெக் 
லேப் மூலம் இப்பயிற்சி நடத்தப்படுகிறது. 

இதில் ஒரு பயிற்சி வகுப்பறையில் 20 ஆசிரியர்கள் என்ற வகையில், 
மாவட்டம் முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பரவலாக 
இப்பயிற்சி நடைபெற்று வருகிறது.

இதில் ஒவ்வொரு பாடத்திற்கும் 2 நாள் என்ற வகையில் 8 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியினை வட்டாரக் கல்வி 
அலுவலர் விமலா தொடங்கி வைத்தார். 

இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி உள்ளிட்ட கருத்தாளர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இதுபோல் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி கணித ஆசிரியர்களுக்கு மகிழ் கணிதம் என்ற 2 நாள் பயிற்சி இன்றும் (20-ந்தேதி), நாளையும் நடைபெறுகிறது. 

பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். 

மேலும் ஆசிரியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்ட 
நோய்த்தடுப்பு வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படுகிறது என 
கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் 
ஆசிரியர்களுக்கும் 8 நாள் பயிற்சி நடைபெற உள்ளது.
Tags:    

Similar News