உள்ளூர் செய்திகள்
ஜெயக்குமார்

சோதனைகளால் அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது- ஜெயக்குமார் ஆவேசம்

Published On 2022-01-20 08:09 GMT   |   Update On 2022-01-20 10:10 GMT
மக்களின் கடும் கோபத்துக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகி உள்ள விடியாத அரசு அதை மறக்கடிக்க வைப்பதற்காக தான் ரெய்டு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை:

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெறும் ரெய்டு குறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியையும் அதன் கண்களையும் உறுத்திக்கொண்டிருக்கும் அ.தி.மு.க.வை எப்படியாவது அழித்து விட வேண்டும். அதன் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வினர் லஞ்சப்பேர்வழிகள் என்ற தவறான தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு காவல்துறையை ஏவி பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது விடியாத அரசு.

பொங்கலுக்கு 21 வகை பொருட்களை கொடுப்பதாக அறிவித்தார்கள். அது எந்த அளவுக்கு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது என்பதை பொதுமக்கள் அதை தூக்கி வீசியதில் இருந்தே பார்க்க முடிந்தது.

உருகிய வெல்லம், மிளகில் பருத்திக்கொட்டை கலப்படம், கலப்பட மஞ்சள் என்று பரிசு குப்பைகளை கொடுத்து மக்களை ஏமாற்ற நினைத்தார்கள். ஆனால் மக்கள் ஏமாறவில்லை. மக்களின் கடும் கோபத்துக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகி உள்ள விடியாத அரசு அதை மறக்கடிக்க வைப்பதற்காக தான் ரெய்டு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.

தங்கள் பெயரை காப்பாற்ற புது புது யுக்திகளை கையாண்டு வருகிறது. சீப்பை எடுத்து மறைத்து வைத்தால் திருமணம் நடக்காது என்று சிலர் நினைப்பார்களாம். அப்படித்தான் தி.மு.க.வும் நினைக்கிறது.

அ.தி.மு.க.வின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தவும் முடியாது. எந்த கொம்பனாலும் அழித்திடவும் முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News