சேலம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி
வாழப்பாடி:
சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் குள்ளம்பட்டி பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் சாரதி (வயது 14).
இவர், இதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவர், நேற்று தங்களது தோட்டத்திலுள்ள விவசாய கிணற்றில், உறவினர்கள் அருண்குமார், விஷ்ணு ஆகியோருடன் நீச்சல் பழகியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கிய சிறுவன் சாரதி நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. இதுகுறித்து இவரது உறவினர்கள் வாழப்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் சிறுவன் பரிதாபமாக இறந்தான். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாழப்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் காரிப்பட்டி போலீசார், கிணற்றிலிருந்து நீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றினர்.
இதையடுத்து சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.