உள்ளூர் செய்திகள்
விஷம் வைத்து சாகடிக்கப்பட்ட மயில்களை காணலாம்

மூங்கில்துறைப்பட்டு அருகே 11 மயில்கள் விஷம் வைத்து சாகடிப்பு- 2 விவசாயிகள் கைது

Published On 2022-01-19 03:32 GMT   |   Update On 2022-01-19 03:32 GMT
மூங்கில்துறைப்பட்டு அருகே மக்காச்சோளப்பயிரை சேதப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்து 11 மயில்களை விஷம் வைத்து சாகடித்த 2 விவசாயிகளை வனத்துறையினர் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள மல்லாபுரம், புதுப்பட்டு, ஆனைமடுவு, மூலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலைகள் மற்றும் காப்பு காடுகளில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் வசித்து வருகின்றன. குறிப்பாக மயில்கள் இங்கு அதிக அளவில் காணப்படுகிறது. இவற்றை மர்ம நபர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வேட்டையாடி வருகின்றனர்.

மேலும் அருகில் விவசாய நிலங்களில் இரை தேடி செல்லும் மயில்கள் நெல் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதால் அவற்றை கட்டுப்படுத்த சில விவசாயிகள் தானியத்தில் விஷத்தை கலந்து வைத்து அவற்றை கொன்று வருவதாகவும் புகார் எழுகின்றன.

இந்த நிலையில் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மல்லாபுரம் பெரிய ஓடை பகுதியில் 11 மயில்கள் மர்மமான முறையில் செத்து கிடந்தன. இதுபற்றிய தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி வனச்சரக அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் வனவர் முருகன், காப்பாளர்கள் ராம்குமார், சதீஷ்குமார் ஆகியோர் விரைந்து வந்து செத்து கிடந்த 11 மயில்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால் நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

மயில்களின் உடலில் காயம் எதுவும் இல்லாததால் உணவில் விஷத்தை கலந்து கொடுத்து அவற்றை கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் தர்மலிங்கம்(வயது 51), சுப்பிரமணியன்(55) ஆகியோர் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிரை மயில்கள் சேதப்படுத்தி வந்ததால் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக குருனை மருந்து கலந்த தானியத்தை நிலத்தில் வைத்ததும், அதை சாப்பிட்ட மயில்கள் ஓடையில் செத்து கிடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தர்மலிங்கம், சுப்பிரமணியன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாட்டின் தேசிய பறவையான மயில் முருகப்பெருமானின் வாகனமாக கருதி இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். தைப்பூச திருநாளில் மயில்கள் செத்து கிடந்த தகவல் மல்லாபுரம் கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Tags:    

Similar News