உள்ளூர் செய்திகள்
பனியன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு பனியன் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
பருத்தி பதுக்கல் மற்றும் நூல் ஏற்றுமதி காரணமாக நூல் விலை கடந்த 6 மாதங்களில் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதனால் புதிய ஆர்டர்கள் எடுக்க முடியாமலும், பழைய ஆர்டர்களை செய்ய முடியாமலும் பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
மத்திய அரசு உடனடியாக மூலப்பொருளான நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இணைந்து 2 நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
நேற்று துவங்கிய வேலை நிறுத்தத்தில் 15 ஆயிரம் பனியன் நிறுவனங்கள் மற்றும் 5 ஆயிரம் சார்பு நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு பனியன் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி தலைமை தாங்கினார்.
டீ மா சங்க தலைவர் முத்து ரத்தினம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.