உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரி கோவிலில் கும்பாபிஷேக விழா
ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் அதிகாலையில் யாக பூஜை தொடங்கியது.
விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், கஜ பூஜை ஆகியவை நடந்தன. மாலையில் தீர்த்த பவனி நடைபெற்றது.
2-வது நாள் காலையில் மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா ஹோமம், அஸ்தர ஹோமம், தன பூஜை மற்றும் கோ பூஜை நடந்தன. மாலையில் யாகசாலை பிரவேசம் மற்றும் கும்ப அலங்கார பூஜை நடந்தன.
3-வது நாள் காலையில் நடந்த யாகசாலை பூஜையில் வேத பாராயணம், திருமுறை பாராயணம், தீபாராதனை ஆகியவை நிகழ்ந்தன. இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது.
நிறைவு நாளான நேற்று காலையில் 4-ம் கால யாகசாலை பூஜை, கோபுர விமான கலச மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன்பின் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் மகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.