உள்ளூர் செய்திகள்
பலியான மாணவர்கள் யுவன், சக்கரவர்மன்,அமிர்தகிருஷ்ணன், ஸ்ரீதர், ரஞ்சித், மோகன்.

அமராவதி ஆற்றில் மூழ்கி மாணவர்கள் 6 பேர் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய திருப்பூர் இடுவாய் கிராமம்

Published On 2022-01-18 06:43 GMT   |   Update On 2022-01-18 06:43 GMT
தாராபுரம் அமராவதி ஆறு புதுப்பாலத்தின் இருபுறத்திலும் புதைமணல் உள்ளது.
தாராபுரம்:

திருப்பூர் இடுவாய் கிராமம் அண்ணாமலை கார்டன் பகுதியை சேர்ந்தவர்கள் அமிர்தகிருஷ்ணன் (வயது 18), ஸ்ரீதர் (17), யுவன்(19),மோகன் (17) , சக்கரவர்மன் (18), ரஞ்சித்(20). 

பள்ளி, கல்லூரி மாணவர்களான இவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திண்டுக்கல் மாவட்டம் மாம்பறை பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் சாமிதரிசனம் செய்து விட்டு நேற்று மாலை ஊருக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர்.  

தாராபுரம் அமராவதி ஆறு புதுப்பாலம் பகுதியில் வரும்போது வேனை அங்கு நிறுத்திவிட்டு அமராவதி ஆற்றில் இறங்கி குளித்தனர். 

இதில் அமிர்தகிருஷ்ணன், ஸ்ரீதர், யுவன், மோகன், சக்கரவர்மன், ரஞ்சித் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றனர். அவர்கள் காப்பாற்றுமாறு கூச்சலிடவே அங்கு நின்ற பொதுமக்கள் 6 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் 6 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கிய 6 பேரின் உடல்களையும் மீட்டனர். 

பின்னர் 6 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 6 பேரையும் காப்பாற்ற முயன்று காயமடைந்த ஜீவா, சரண் ஆகியோரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அமராவதி ஆற்றில் மூழ்கி மாணவர்கள் 6 பேர் பலியான சம்பவம் திருப்பூர் இடுவாய் கிராமமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனைக்காக மாணவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இடுவாய் கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். 

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று பலியான மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உடனடியாக எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்துறையினரிடம் அவர் அறிவுறுத்தினார். 

தாராபுரம் அமராவதி ஆறு புதுப்பாலத்தின் இருபுறத்திலும் புதைமணல் உள்ளது. தாராபுரம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு புதைமணல் பகுதி தெரியும். ஆனால் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு புதை மணல் இருக்கும் இடம் தெரியாது. 

இதனால் வெளியூரில் இருந்து வருபவர்கள் ஆற்றில் இறங்கி புதை மணலில் சிக்கி இறந்து விடுகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் இதே பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

இதனால் இந்த பகுதியில் மட்டும் இதுவரை 30 க்கும் மேற்பட்ட உயிர்பலி ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பலமுறை பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 

புதைமணல் பகுதியில் அதிகாரிகள் முறையான எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் இது போன்ற உயிர்பலி ஏற்பட்டு இருக்காது என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே உயிர் பலியை தடுக்கும் விதமாக உடனே அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
Tags:    

Similar News