உள்ளூர் செய்திகள்
கொலை

கோவையில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை

Published On 2022-01-18 05:51 GMT   |   Update On 2022-01-18 06:12 GMT
கோவையில் ரோட்டோரத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை:

கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளது.

இந்த மார்க்கெட்டில் ஏராளமானோர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் வேலை முடிந்ததும் எதிர்புறம் உள்ள கடையின் முன்பு படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டு இருந்தனர். எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் சண்முகம் (வயது 45) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு இவர் வேலை முடிந்ததும் மார்க்கெட் எதிர்புறம் உள்ள கடை முன்பு படுத்து தூங்கினார். அப்போது அந்த வழியாக சென்ற யாரோ மர்மநபர் சண்முகத்தில் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தனர். இதில் சம்பவஇடத்ததிலேயே அவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபாக இறந்தார். இதனை இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சண்முகம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமாக என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காலையில் ரோட்டோரத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News