உள்ளூர் செய்திகள்
கொள்ளை

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை

Published On 2022-01-18 03:54 GMT   |   Update On 2022-01-18 03:54 GMT
திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நவ்லாத்தூர் ஊராட்சி பல்லவன் திருநகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 14-ந் தேதியன்று விடுமுறை என்பதால் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் செங்கல்பட்டில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று இருந்தார்.

இந்த நிலையில் அவரது மனைவி, மாமனார், மாமியார் மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 2 நபர்கள் பீரோவில் இருந்த பணத்தை திருடிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கொள்ளையர்கள் அந்த பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடிக்க முயன்றனர். இதைகண்ட ராஜேஷின் மனைவி மற்றும் அவரது மாமனார், மாமியார் ஆகியோர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.

ஆனால் கொள்ளையர்கள் அவர்களை தாக்கிவிட்டு நகை பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜேஷ் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருப்பதை போலீசார் கண்டனர். இதை வைத்து தப்பியோடிய கொள்ளையர்களை மணவாளநகர் போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News