ஊரடங்கையட்டி தேவையற்ற காரணங்களுக்காக ரோட்டில் சுற்றி வந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் மாநகரில் 12 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு - வெறிச்சோடிய சாலைகள்
பதிவு: ஜனவரி 16, 2022 13:48 IST
மாற்றம்: ஜனவரி 16, 2022 13:49 IST
திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
திருப்பூர்:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், மருந்துக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்தும் கடைகளும் அடைக்கப்பட்டன.
திருப்பூர் மாநகரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ஊத்துக்குளி ரோடு, அவிநாசி ரோடு பல்லடம் ரோடு உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மளிகை , இறைச்சி, காய்கறி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ், கார், வேன், ஆட்டோக்கள் இயங்க வில்லை. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் பல்வேறு இடங்களில் ஒரு சில ஓட்டல்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.
பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டன.தாராபுரம் ரோடு, அவிநாசி ரோடு, காங்கேயம் ரோடு, பல்லடம் ரோடு உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் 22 ரோந்து வாகனங்கள் மூலம் மாநகரம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தெரு பகுதிகளிலும் சென்று சோதனையில் ஈடுபட்டனர். மாநகரில் உள்ள மேம்பாலங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.
அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் சரக்கு வாகனங்களும் இயக்கப்படவில்லை. பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சப்ளைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பொருட்களை கொண்டு செல்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.
தேவையற்ற காரணங்களுக்காக ரோட்டில் சுற்றி வந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் மாநகரை பொறுத்தவரை முழு ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடைகள் அடைப்பு, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் மாநகர் பகுதியானது வெறிச்சோடி காணப்பட்டதுடன் மிகவும் அமைதியாக காட்சியளித்தது.
இதேப் போல் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம், தாராபுரம், காங்கேயம், வெள்ள கோவில், உடுமலைப்பேட்டை, குண்டடம், மூலனூர், குடிமங்கலம், மடத்துக்குளம் குன்னத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் உடுமலையில் கேரளா எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் கேரளாவிலிருந்து உடுமலை ஒருவழியாக திருப்பூரில் எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
Related Tags :