உள்ளூர் செய்திகள்
கொலை

கடையத்தில் தொழிலாளி கல்லால் தாக்கி படுகொலை

Published On 2022-01-15 05:17 GMT   |   Update On 2022-01-15 05:17 GMT
கடையத்தில் தொழிலாளி கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கானாவூரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 30). செங்கல் சூளை தொழிலாளி. இவரது சகோதரியை அதே ஊரை சேர்ந்த முருகன் (32) என்பவர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் முருகனுக்கும், அவர் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை தட்டிக் கேட்க தனது சகோதரி வீட்டுக்கு நாகராஜன் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் எற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த முருகனின் தாய் பார்வதி, நாகராஜனை கம்பால் தாக்கி உள்ளார்.

உடனே முருகனும் அருகில் கிடந்த கல்லை எடுத்து நாகராஜனின் தலையில் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் நாகராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

தகவலறிந்த கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையிலான போலீசார் படுகாயம் அடைந்த நாகராஜனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நாகராஜன் இறந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்வதியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நாகராஜனுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2 வருடத்திற்கு முன்பு அவரது மனைவி தீ விபத்தில் இறந்து விட்டார். தற்போது நாகராஜனும் கொலை செய்யப்பட்டு விட்டதால் 2 குழந்தைகளும் அனாதையாகிவிட்டதாக கூறி அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

Tags:    

Similar News