உள்ளூர் செய்திகள்
நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா
டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர்& காந்திமதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு திருவிழா கடந்த
9-ந்தேதி பக்தர்கள் இன்றி எளிமையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 4-ம் நாளான இன்று திருநெல்வேலிக்கு பெயர் வர காரணமான நெல்லுக்கு வெளியிட்ட திருவிழா நடைபெற்றது.
முற்காலத்தில் வேதப்பட்டர் சுவாமிக்கு நெய் வேத்தியம் படைக்க யாசகம் பெற்ற நெல்லை காயவைத்துவிட்டு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது கடும் மழை பெய்தது.
சுவாமிக்கு நெய் வைத்தியம் படைக்க காயவைத்த நெல் மழையில் நனைந்து விடுமோ என்ற வேதனையில் வேதப்பட்டர் வந்து பார்த்தபோது நெல் மழையில் நனையாமல் வேலியிட்டு காத்தருளியதால் திருநெல்வேலி என பெயர் வர காரணமாக அமைந்தது.
இந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூறும்வகையில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடத்தப்படுகிறது. இதையொட்டி இன்று காலை வேதப்பட்டர் மரச்சாப்பரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் நெல்மணிகளை யாசகம் பெறும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து அதனை மகாநந்தி மண்டபத்தில் உலர வைக்கும் நிகழ்ச்சியும், அதன் பின்னர் கோவிலில் உள்ள கொற்றாம்மரைகுளத்தில் வேதப் பட்டர் குளிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து நெல் மணிகளை உலர வைத்த இடத்தில் பதிகம் பாடி நிகழ்ச்சியும் நடந்தது.
பின்னர் வேதப்பட்டருக்கு சுவாமி அம்மாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. இன்று மாலை ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மாள் உட்பிரகாரத்தில் காட்சி கொடுக்கின்றார்.
18-ந்தேதி தைப்பூசம் அன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அப்பொழுதும் சுவாமி-அம்மாள் கோவிலில் இருந்து புறப்பட்டு சந்திப்பு கைலாசப்புரத்தில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அப்போது தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.
19-ந்தேதி பிற்பகல் 12 மணிக்கு கோவிலில் சவுந்திர மண்டபத்தில் நடராஜர் திருநடன காட்சி நடைபெறும். 20-ந்தேதி வெளித்தேப்பத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில் உட்பிரகாரத்தில் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.