உள்ளூர் செய்திகள்
அபராதம்

முழு ஊரடங்கில் சாலைகளில் சுற்றித்திரிந்த 403 பேரிடம் ரூ.80 ஆயிரம் அபராதம் வசூல்

Published On 2022-01-11 09:28 GMT   |   Update On 2022-01-11 09:28 GMT
அத்தியாவசிய தேவைகளின்றி முழு ஊரடங்கின் போது ஊர் சுற்றியதாக நேற்று மட்டும் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. முககவசம் அணியாமல் சுற்றித் திரிந்ததாக 403 பேருக்கு ரூ.80 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனர்.
திருவள்ளூர்:

கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அறிவித்தது. அப்போது அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.

இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் அரசின் உத்தரவை மீறி வாகன ஓட்டிகள் திரளானோர் சாலைகளில் சுற்றித் திரிந்தனர்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வீ.வருண்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், கடம்பத்தூர், திருமழிசை, வெள்ளவேடு, மணவாளநகர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பெரியபாளையம், மீஞ்சூர் சோழவரம் அனைத்து பகுதியிலும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சாலையில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை மடக்கி முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

மேலும் அத்தியாவசிய தேவைகளின்றி முழு ஊரடங்கின் போது ஊர் சுற்றியதாக நேற்று மட்டும் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. முககவசம் அணியாமல் சுற்றித் திரிந்ததாக 403 பேருக்கு ரூ.80 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News