உள்ளூர் செய்திகள்
திசையன்விளை அருகே பொதுமக்கள் சாலை மறியல்
திசையன்விளை அருகே பஞ்சாயத்து முன்னாள் செயலாளரை போலீசார் கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் சிலர் மணல் திருட்டில் ஈடுபடுவதாக கிராம நிர்வாக அலுவலர் இசக்கியப்பன், திசையன்விளை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு ஆட்கள் யாரும் இல்லை. பொக்லைன் எந்திரம் மட்டும் இருந்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்து முன்னாள் ஊராட்சி செயலாளரான பால சுப்பிரமணியன் என்பவரை கைது செய்தனர்.
அவரது கைதை கண்டித்து, கஸ்தூரி ரெங்கபுரம் பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் உள்ள மயானத்தை செப்பனிட மணல் எடுக்கப்பட்டதை மாற்றி மணல் திருடியதாக போலீசார் பொய்வழக்கு போட்டுள்ளனர் என்று கூறி அவர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் மறியல் நடந்த இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
கைதான பாலசுப்பிரமணியனின் மனைவி கணபதி, கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.