உள்ளூர் செய்திகள்
காய்கறிகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிவு

Published On 2022-01-09 08:48 GMT   |   Update On 2022-01-09 08:48 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை உள்பட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.

கனமழையால் நெல் மற்றும் காய்கறி பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் மார்க்கெட்டுகளுக்கு காய் கறிகள் வரத்து வெகுவாக குறைந்தது.

காய்கறிகள் விலை அனைத்தும் கிடுகிடுவென உயர்ந்தன. தக்காளி மற்றும் கத்தரிக்காய் விலை உச்சத்தை தொட்டது.

தக்காளி கிலோ ரூ.110-க்கும் கத்தரிக்காய் ரூ.80-க்கும் விற்பனை ஆனது. மற்ற காய்கறிகள் அனைத்தும் ரூ.50-க்கும் மேல் விற்கப்பட்டதால் பொது மக்கள் சிரமத்துக்குள்ளானார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது மழை இல்லாததால் காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகளவு காய்கறிகள் வந்தன.

கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை வேகமாக சரிந்து வருகிறது. கத்தரி, முள்ளங்கி, புடலங்காய் கிலோ ரூ.10க்கு விற்கப்படுகிறது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.14க்கும், பீன்ஸ், பெரிய வெங்காயம், அவரை, முட்டைக்கோஸ் தலா ரூ.20-க்கும், தக்காளி ரூ.25-க்கும், வெண்டைக்காய், பாகற்காய் தலா ரூ.30-க்கும் விற்கப்படுகிறது.

நூக்கல் ரூ.12-க்கும், பீட்ரூட் ரூ.35-க்கும், கேரட், சின்ன வெங்காயம் தலா ரூ.40-க்கும், முருங்கை கிலோ ரூ.80-க்கும் விற்கப்படுகிறது.

இது தொடர்பாக கோயம்பேடு மொத்த வியாபாரிகள் கூறும்போது, காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளதால் அதன் விலை குறைந்து வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு காய்கறிகள் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

காய்கறி விலை குறைந்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News