உள்ளூர் செய்திகள்
பனியன் நிறுவனத்தில் தீ விபத்து - பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பனியன் நிறுவனத்தின் முதல் மாடியிலிருந்து கரும் புகை கிளம்பியது.
திருப்பூர்:
திருப்பூர் பி.என்.ரோடு, எஸ்.சி., காலனியை சேர்ந்தவர் சாதிக் பாஷா ( வயது 40). இவர் அதே பகுதியில் சிறிய அளவில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்ததும் நிறுவனத்தை மூடிவிட்டு சென்றார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பனியன் நிறுவனத்தின் முதல் மாடியிலிருந்து கரும் புகை கிளம்பியது. சற்று நேரத்தில் மளமளவென தீ பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்களுக்கும் சாதிக் பாஷாவிற்கும் தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பனியன் நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.