திருவள்ளூரில் வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களை நிறுத்தி அபராதம்
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. நேற்று புதிதாக 444 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க சுகாதார அதிகாரிகளும், நகராட்சி அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சுதர்சன் சுதாகர் மற்றும் ஊழியர்கள் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
கொண்டமபுரம் தெரு, வடக்கு ராஜவீதி மோதிலால் தெரு ஜே.என்.சாலை மக்கள் அதிகம் கூடும் பகுதியில் திடீரென ஆய்வு செய்து வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை மடக்கிப்பிடித்து அபராதம் விதித்து அறிவுரை கூறினர்.
பொது இடங்களில் கடை நடத்தி வருபவர்கள் முக கவசம் அணியாமலும் தடுப்பூசி போடாமல் இருந்தால் அபராதம் மற்றும் கடையை பூட்டி சீல் வைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளிக் கிழமையான இன்று வழி பாட்டுத் தலங்களுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில், புட்லூர் அங்காளம்மன் கோவில், திருத்தணி முருகன் கோவில், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் உள்ளிட்ட கோயில்கள் வெறிச்சோடி காணப்பட்டது.