உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2021-12-31 09:35 GMT   |   Update On 2021-12-31 09:35 GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டு அறையில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மழைநீர் தேக்கம் குறித்த புகார்கள் குறித்தும், அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி, சென்னை திரும்பினார்.

பின்னர் சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டு அறையில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மழைநீர் தேக்கம் குறித்த புகார்கள் குறித்தும், அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், கட்டுப்பாட்டு அறையில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ள பிற சேவை துறைகளான காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மின்துறை சார்ந்த அலுவலர்களுடன் அவர்கள் துறை சார்ந்த புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, முதல்- அமைச்சர் சென்னை மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர்கள், வட்டார துணை ஆணையாளர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் ஆகியோருடன் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் அகற்றும் பணிகள் குறித்தும், இயக்கப்பட்டு வரும் மோட்டார் பம்புகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் தேவையான அளவிற்கு நீர் இறைக்கும் பம்புகள் கொண்டு உடனடியாக தேங்கிய மழை நீரை வெளியேற்றவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் முதல்-அமைச்சர் சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மோட்டார் பம்புகள் கொண்டு மழைநீர் வெளியேற்றப்படும் பணியையும், பெரியமேடு சைடன ஹாம்ஸ் சாலையில் மசூதி அருகே தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்பு கொண்டு வெளியேற்றப்படும் பணியையும் மற்றும் பாரிமுனை பிரகாசம் சாலை சந்திப்பில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பாலங்களில் தேங்கி இருக்கும் மழைநீர் தேக்கத்தை அகற்றவும், ரெயில்கள், பேருந்துகள் இயக்கும் நேரத்தை அதிகப்படுத்திடவும், மின்சாரம் தடையின்றி கிடைத்திடவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், பொதுமக்களும் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதோடு மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பி. கே. சேகர்பாபு, அரசு முதன்மை செயலாளர், சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News