உள்ளூர் செய்திகள்
இன்ஸ்பயர் விருது திருப்பூரில் 55 மாணவர்கள் தேர்வு
நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர்களின் சிறந்த அறிவியல் படைப்புகள் அந்தந்த மாவட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
திருப்பூர்:
அறிவியல் கண்டுபிடிப்புகளில் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ‘இன்ஸ்பையர்’ விருது வழங்கி வருகிறது. இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்களது புதுமையான அறிவியல் படைப்புகளை சமர்ப்பித்து தேர்வு செய்யப்படுவர்.
நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர்களின் சிறந்த அறிவியல் படைப்புகள் அந்தந்த மாவட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.இதன்படி தமிழகத்தில் ஆயிரத்து 596 மாணவர்கள் இவ்விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. திருப்பூரில் 55 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவிநாசி கல்வி மாவட்டத்தில் - 11, தாராபுரம் - 6, காங்கயம் - 7, மடத்துக்குளம் - 4, திருப்பூர் - 19, உடுமலை - 8 பேர் தேர்வாகியுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.