உள்ளூர் செய்திகள்
அன்னபூரணி

நான் ஆன்மிகவாதி, கடவுள் அவதாரம் இல்லை- பெண் சாமியார் அன்னபூரணி பேட்டி

Published On 2021-12-30 04:24 GMT   |   Update On 2021-12-30 04:24 GMT
கடவுள் என்றால் யார், அவரது சக்தி என்ன, நீ யார், நான் யார் என்பது பற்றி என்னிடம் வருபவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறேன் என்று பெண் சாமியார் அன்னபூரணி கூறினார்.
சென்னை:

சமூக வலைதளங்களில் குறிப்பாக யூடியூப் சேனல்களில் பெரும் பரபரப்பாக பேசப்படும் பெண் சாமியார் அன்னபூரணி. அவரை கடவுளின் அவதாரம் என்றும், அதிபராசக்தியின் அம்சம் என்றும் அவரது பக்தர்கள் கொண்டாடுவதாக கடந்த 2 நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன. அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று பெண் சாமியார் அன்னபூரணி திடீரென்று காரில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, தன்னைப் பற்றி தவறான தகவல்கள் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு கொடுக்க அன்னபூரணி வந்துள்ளார் என்று அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

உயர் போலீஸ் அதிகாரிகளை பார்க்க அன்னபூரணி நீண்டநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. பின்னர் ஒரு வழியாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை சந்தித்து அன்னபூரணி புகார் மனுவை கொடுத்துவிட்டு, பிற்பகல் 2 மணி அளவில் கமிஷனர் அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தார்.

அவரை பேட்டி காண ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் கமிஷனர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர்.

அன்ன பூரணி அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. என்னை சாமியார் என்றும், போலிச்சாமியார் என்றும், நான் தலைமறைவாகி விட்டதாகவும் செய்திகள் பரவியுள்ளன. இது பற்றி விளக்கம் அளித்து மனு கொடுக்க கமிஷனர் அலுவலகம் வந்தேன். மனுவும் கொடுத்துள்ளேன்.

நான் சாமியார் என்று யாரிடமும் சொல்லவில்லை. நான் சாமியார் இல்லை. ஆன்மிகவாதி. என்னிடம் வருபவர்களுக்கு ஆன்மிகம் தொடர்பாக பயிற்சி கொடுத்து, தீட்சதை வழங்குகிறேன். நான் கடவுள் அவதாரம் இல்லை. ஆதிபராசக்தியின் அம்சம் என்றும் என்னை நான் சொல்லவில்லை.

கடவுள் என்றால் யார், அவரது சக்தி என்ன, நீ யார், நான் யார் என்பது பற்றி என்னிடம் வருபவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறேன்.

நான் அருள்வாக்கும் சொல்லவில்லை. எனது காலில் விழ வேண்டும் என்று யாரையும் வற்புறுத்தவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக ஆன்மிக பயணம் செய்கிறேன். எனது குடும்பம் பற்றியும் நான் சொல்லத் தேவையில்லை. எனது ஆன்மிக பயணம் பற்றி இப்போது எதுவும் வெளிப்படையாக பேச முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட சரமாரி கேள்விகளுக்கு, எனது ஆன்மிக பயணம் பற்றி சூழ்நிலை வரும்போது விளக்கமாக பதில் அளிக்கிறேன் என்று கூறிவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார்.

அன்னபூரணி கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் சென்னை திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் குடும்பத்துடன் வசிக்கிறேன். எனது கணவர் மாரடைப்பால் இறந்ததை மர்ம மரணம், சாவில் சந்தேகம் உள்ளது என்று சிலர் தவறான தகவல் பரப்புகிறார்கள். எனக்கு செல்போன் வாயிலாக கொலை மிரட்டல் வருகிறது. எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News