உள்ளூர் செய்திகள்
ஆம்பூரில் தண்டவாளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் ரெயில் மோதி பலி
ஆம்பூரில் தண்டவாளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் ரெயில் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த தெக்குப்பட்டு சிகரானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் வினோத் குமார் (வயது 33). இவர் ஆம்பூர் ரெயில் நிலையத்தில் டிராக் மேனாக வேலை செய்து வந்தார். நேற்று காலை ஆம்பூர்- பச்சகுப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே கன்னிகாபுரம் பகுதியில் தண்டவாளம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயில் வினோத்குமார் மீது மோதி உள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.