உள்ளூர் செய்திகள்
சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேம்பாட்டு பணிகள் தொடக்கம்
விற்பனை கூடத்துக்குள் உள்ள முகப்பு ரோடு, குடோன், பரிவர்த்தனை கூடம் மற்றும் உலர்களத்துக்கு செல்லும் பாதையும் புதுப்பிக்கப்பட உள்ளது.
அவிநாசி:
அவிநாசி சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உட்கட்டமைப்பு பணி மேம்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.
பிரதி திங்கள் தோறும் இங்கு நிலக்கடலை ஏலம் நடத்தப்படுகிறது. அவிநாசி, சேவூர், கோபி, நம்பியூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் நிலக்கடலையை ஏலத்துக்கு எடுத்து வருகின்றனர்.
சீசனின் போது நிலக்கடலையை அங்குள்ள உலர்களத்தில் உலர்த்தி காய வைத்து விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு செல்வது வழக்கம். இங்கு 1,000 முதல் 1,200 டன் நிலக்கடலையை உலர்த்தி வைக்க கூடுதலாக உலர்களம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும் விற்பனை கூடத்துக்குள் உள்ள முகப்பு ரோடு, குடோன், பரிவர்த்தனை கூடம் மற்றும் உலர்களத்துக்கு செல்லும் பாதையும் புதுப்பிக்கப்பட உள்ளது.
இங்குள்ள பரிவர்த்தனை கூடங்களில் பழுது நீக்கப்பட்டு அவற்றின் மேற்கூரை புதுப்பிக்கப்பட உள்ளது.
அடுத்தாண்டு சீசனின் போது இந்த விற்பனைக்கூடம் புதுப்பொலிவுடன் காணப்படும் என விற்பனைக்கூட சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.