உள்ளூர் செய்திகள்
குழந்தை திருமணம்

கோவையில் இந்த ஆண்டு 90 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் 132 புகார்கள் பதிவு

Published On 2021-12-25 09:04 GMT   |   Update On 2021-12-25 09:04 GMT
குழந்தை திருமண எண்ணிக்கையை காட்டிலும் கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது.
கோவை:

இந்தியாவில் ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணுக்கு 18 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பெற்றோரின் அவசரத்தாலும் பல்வேறு காரணங்களாலும் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு கூட திருமணம் செய்து வைப்பது நடைமுறையில் உள்ளது. தேசிய குடும்ப நலத்துறையின் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.3 கோடி பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளது.

நாட்டில் நடக்கும் திருமணத்தில் 26.8 சதவீதம், 18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்குதான் நடக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற குழந்தை திருமண எண்ணிக்கையை காட்டிலும் கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மட்டும் இந்த வருடத்தில் 132 குழந்தை திருமண புகார்கள் வந்துள்ளது.இதுகுறித்து மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அதிகாரிகள் கூறுயதாவது:-

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் அதிகப்படியான குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது. இதற்கு அடுத்து மேட்டுப்பாளையம், காரமடை, மதுக்கரை, சூலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் குழந்தை திருமணம் நடைபெறுகிறது. வளர்ச்சியடைந்த கோவை மாநகரமாக கருதப்படும் நிலையில் தினந்தோறும் ஏதாவது ஒரு குழந்தை திருமண புகாராவது வந்து விடுகிறது.

சமூகநலத்துறை சார்பாக அந்தந்த ஊரிலுள்ள அதிகாரிகள் சென்று ஒவ்வொரு பள்ளிகளிலும், வீடுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டுதான் வருகின்றனர். இருந்தாலும் சமீப காலமாக கோவை மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் அதிகரித்து வருவது என்பது வேதனைக்குரிய ஒன்று.

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த மாதம் நவம்பர் வரை 132 குழந்தை திருமணம் நடைபெறுவதாக புகார் வந்தது. இதில் 36 குழந்தை திருமணம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 குழந்தை திருமணங்கள் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கபட உள்ளது.

கோவை மாவட்ட சமூக நலத்துறையின் சார்பாக 90 குழந்தை திருமணங்கள் இந்த ஆண்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பெற்றோர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

மேலும் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் நடைபெறும் திருமணங்கள், சிறு வயதில் காதல் வலையில் வீழ்த்தப்பட்டு கர்ப்பமடையும் சிறுமிகளின் நிலை கேள்விக்குறியாகிறது. சிறு வயதில் கர்ப்பம் அடையும் சிறுமிகளையும், குழந்தைகளையும் காப்பகத்தில் ஒப்படைத்து விடுகிறோம்.

அவரை திருமணம் செய்தவரை போக்சோ வழக்கு மற்றும் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். 18 வயது நிரம்பிய உடன் தான் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் சிறுமிகளின் வாழ்க்கையை சீரழிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News