உள்ளூர் செய்திகள்
ராமதாஸ்

வரும் கல்வி ஆண்டில் நீட் தேர்வு விலக்கு பெற அனைத்துக்கட்சி கூட்டம் - ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2021-12-25 07:08 GMT   |   Update On 2021-12-25 07:08 GMT
நீட் தேர்வு கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கிறது என்பது ஒருபுறமிருக்க, அது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயலுமாகும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில், ஒருபுறம் நீட் தேர்வு அடுத்தடுத்து மாணவர்களை பலி வாங்கிக்கொண்டிருக்கிறது; மற்றொருபுறம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கண்ணுக் கெட்டிய தொலைவு வரை தென்படவில்லை. நீட் விலக்கு நடவடிக்கை தமிழக மாணவர்களை பிணையாக வைத்து நடத்தப்படும் பகடை ஆட்டமாக மாறிவிடக்கூடாது. ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு சிதையக்கூடாது.

நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் நீட் தேர்வின் அடிப்படையில் ஏற்கனவே தொடங்கி விட் டன. அடுத்தக் கல்வியாண்டு தொடங்க இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே உள்ளன. நடப்பாண்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த போது, புதிய அரசு இப்போது தான் பதவியேற்றிருக்கிறது என்பதால், அடுத்த கல்வி ஆண்டிலிருந்து நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று அரசுத் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அடுத்தக் கல்வி ஆண்டுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நீட் விலக்குக்கான அறிகுறி கூட தென்படவில்லை.



அடுத்த கல்வியாண்டில் நீட்டுக்கு விடை கொடுக்கப் போகிறோமா?.... அல்லது நீட்டுக்கு மாணவர்களை தொடர்ந்து பலி கொடுக்கப் போகிறோமா? என்பது தான் இப்போது நம் முன் உள்ள கேள்வி. கடந்த ஐந்தாண்டுகளில் நீட்டுக்கு 70-க்கும் மேற்பட்டவர்களை பலி கொடுத்திருக்கிறோம். இனி ஒருவரைக் கூட பலி கொடுக்கக் கூடாது. அதற்கான ஒரே தீர்வு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவது தான்.

நீட் தேர்வு கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கிறது என்பது ஒருபுறமிருக்க, அது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயலுமாகும். நீட் விலக்கு சட்டத்தை நிறைவேற்றி விட்டோம் என்பதுடன் அரசு ஒதுங்கி விடக் கூடாது. அடுத்த சில மாதங்களுக்குள் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, அடுத்த ஆண்டு முதல் 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News