உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கடும் பனி- குளிர் நிலவும்: வானிலை மையம் தகவல்

Published On 2021-12-24 08:42 GMT   |   Update On 2021-12-24 09:09 GMT
இன்றும், நாளையும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்து கடும் குளிர் மற்றும் பனி நிலவி வருகிறது. வெப்பநிலையும் இயல்பை விட குறைவாக உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும். 27, 28-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்றும், நாளையும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக காணப்படும்.

மேலும் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனி மூட்டமும் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News