உள்ளூர் செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கட்டிட உரிமையாளர் ஒப்புதலின்றி பார் உரிமம் வழங்க கூடாது- டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-12-22 20:49 GMT   |   Update On 2021-12-22 20:49 GMT
கட்டிட உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் மதுபான பார் உரிமம் வழங்கக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் ஆவடியை சேர்ந்த எஸ்.பரமசிவம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

டாஸ்மாக் பார் நடத்தும் உரிமம் பெற்று பல ஆண்டுகளாக பார் நடத்தி வருகிறேன். 2019-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி வரை 2 ஆண்டுகளுக்கு பார் உரிமம் வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளில் 18 மாதங்கள் பார்கள் மூடப்பட்டன.

திறக்கப்பட்ட காலத்திலும், 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால், பார்களில் வருமானம் இல்லை. பார் அமைந்துள்ள கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கு வாடகை கொடுக்க முடியாமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளது.



இந்தநிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கான டெண்டர் அறிவிப்பை கடந்த 14-ந் தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதில் வருகிற 30-ந் தேதி டெண்டர் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே 18 மாதங்கள் பார் திறக்கப்படாமல் நஷ்டம் அடைந்துள்ளோம். அதனால், டெண்டர் விடாமல், மேலும் 2 ஆண்டுகளுக்கு எங்களுக்கு பார் உரிமம் வழங்க வேண்டும் என்று நிர்வாக இயக்குனரிடம் முறையிட்டும் பயன் இல்லை.

மேலும், கட்டிட உரிமையாளரிடம் தடையில்லா சான்று பெற்ற பின்னரே, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பார் உரிமம் வழங்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், இதை மீறி, கட்டிட உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமலேயே பார் உரிமம் வழங்கப்படும் என்று புதிய டெண்டர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். பார் உரிமத்தை நீட்டித்து வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, “டெண்டர் நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால், கட்டிட உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல், மதுபான பார் உரிமத்தை வழங்கக்கூடாது. தற்போது பார் உரிமம் பெற்றுள்ள அனைவருக்கும் டெண்டர் விண்ணப்பத்தை வழங்க வேண்டும். இதில் ஏதாவது முறைகேடு நடந்தால், இந்த ஐகோர்ட்டை நாடலாம். விசாரணையை வருகிற ஜனவரி 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று உத்தரவிட்டார்.

Tags:    

Similar News