மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காணும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்வசந்த் வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
வங்கக்கடல் பகுதியில் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. மீனவர்கள் மீது தாக்குதல், படகுகளை சேதப்படுத்துவது, மீன்பிடி வலைகளை அறுப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ராமேசுவரம் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக கூறி 55 மீனவர்களையும், 8 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களில் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. கடந்த 3 நாட்களில் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள 69 மீனவர்களையும், 10 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் இலங்கை அரசுக்கு தனது கண்டனங்களையும் தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காணும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.