உள்ளூர் செய்திகள்
சென்னை ஐகோர்ட்

அரசு துறைகளில் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு - ஐகோர்ட்டு வேதனை

Published On 2021-12-14 21:24 GMT   |   Update On 2021-12-14 21:24 GMT
அரசு துறைகள் மற்றும் பொது நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சமீபகாலமாக அதிகம் காணப்படுகிறது என சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை:

கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய சக ஆண் ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2013-ம் ஆண்டு பெண் ஊழியர் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து விசாரணை நடத்த, விசாகா கமிட்டியை அமைத்து, அணு ஆராய்ச்சி நிலைய இயக்குனர் உத்தரவிட்டார். அந்த கமிட்டி விசாரணையை தொடங்காததால், 2-வது கமிட்டி அமைத்து உத்தரவிட்டார்.

இந்த 2-வது கமிட்டி விசாரித்து, அறிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து. இந்த கமிட்டி விதிகளின்படி அமைக்கப்படவில்லை என்று 3-வதாக ஒரு கமிட்டியை அணு ஆராய்ச்சி நிலையம் இயக்குனர் அமைத்தார்.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்தார். அதில், 2-வதாக அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கையில், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறியுள்ளது. ஆனால், பாலியல் குற்றச்சாட்டை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக 3-வது கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, 2-வது கமிட்டியின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதை உறுதிசெய்ய வேண்டியது உயர் அதிகாரிகளின் கடமை ஆகும். பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களில் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில், புகார் அளித்து 7 ஆண்டுகள் கடந்தும் முடிவு எட்டப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஒரு பெண்ணால் எப்படி திறமையாக பணியாற்ற முடியும்?



விசாரணையை தாமதப்படுத்துவது என்பது கடமை செய்ய தவறிய செயலாகும், இது ஒரு குற்றமாகவும் கருதப்பட வேண்டும். மேலும், பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்துவிடும்.

எனவே, 3-வதாக கமிட்டி அமைத்த உத்தரவை ரத்து செய்கிறேன். பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான சட்டத்தை பின்பற்றி, புதிய கமிட்டியை ஒரு வாரத்தில் பாபா அணு ஆராய்ச்சி இயக்குனர் அமைக்க வேண்டும்.

அந்த கமிட்டி 6 மாதத்தில் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதில், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

அரசு துறைகள் மற்றும் பொது நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சமீபகாலங்களில் அதிகம் காணப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை உயர் அதிகாரிகள் தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

Similar News