விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட விவசாய சங்கங்களும், விவசாய பெருங்குடி மக்களும் தயாராக வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2014 பொதுத்தேர்தலில் தீவிரமான தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட நரேந்திர மோடி, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவேன், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நியாயவிலை வழங்குவேன்,
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என வாக்குறுதிகளை அள்ளி வீசிய காரணத்தால் தான் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் உள்ளிட்ட எதையும் நிறைவேற்றாமல், மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
விவசாயிகளை கலந்து பேசாமல் பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு இருக்கும் பெரும்பான்மை எண்ணிக்கையின் அடிப்படையில் 3 வேளாண் சட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றியது.
விவசாயிகளின் தானியங்களை கொள்முதல் செய்கிற ஏகபோக உரிமை ஒருசில கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை எதிர்த்து விவசாயிகள் கடும் குளிர் மற்றும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடந்த ஓராண்டு காலமாக போராடி சமீபத்தில் தான் மோடி அரசு, வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக கூறியதன் பேரில் விவசாயிகள் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.
நீண்டகாலமாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கையை பரிசீலிப்பதற்கு கூட மோடி அரசு தயாராக இல்லை. ஆனால், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு 4 கோடி விவசாயிகள் பெற்ற கடன் தொகையான ரூபாய் 68 ஆயிரம் கோடியை ஒரே நேரத்தில் தள்ளுபடி செய்து விவசாயிகளின் கடன் சுமையை அகற்றியது.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கு தொடர்ந்து பா.ஜ.க. அரசு மறுத்து வருகிறது.
ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வசூலிக்க முடியாத வாராக்கடன் 2.02 லட்சம் கோடி ரூபாயை கடந்த 2020-21 -ம் ஆண்டில் மட்டும் மத்திய பா.ஜ.க. அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதைவிட கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவு அரசு தான் மோடி அரசு என்று கூறுவதில் என்ன தவறு?
விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை கொண்டு வந்து அவர்களது வாழ்வாதாரத்தை பாழடிக்கிற முயற்சியில் ஈடுபட்ட பா.ஜ.க. அரசு, தீவிரமான விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக பணிய நேரிட்டது. ஆனால், விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ, கோரிக்கைகளை பரிசீலிக்கவோ மத்திய பா.ஜ.க. அரசு தயாராக இல்லை.
ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கார்ப்பரேட் நிறுவனங்களே கோரிக்கை வைக்காத நிலையில் பா.ஜ.க. அரசே முன்வந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஆணையிட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை வாராக் கடன் என்று கூறி தள்ளுபடி செய்தது.
இத்தகைய விவசாய விரோத போக்கை கண்டித்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் ஓராண்டு முழுவதும் தொடர் போராட்டம் நடத்தியதால் மத்திய பா.ஜ.க. அரசு பணிந்தது. அதை போல விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பி நாடு முழுவதும் எழுச்சிமிக்க போராட்டத்தை நடத்தினால், மத்திய பா.ஜ.க. அரசை கடன் தள்ளுபடி கோரிக்கையை ஏற்கும் வகையில் பணிய வைக்க முடியும். இதற்கு விவசாய சங்கங்களும், விவசாய பெருங்குடி மக்களும் தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.