உள்ளூர் செய்திகள்
பிபின் ராவத் மறைவு தேசத்திற்கு மிகப்பெரிய இழப்பு - இந்து முன்னணி மாநில தலைவர் அறிக்கை
இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமை அதிகாரி பிபின் லட்சுமண் சிங் ராவத் பாரத தேசத்தை காக்க 43 ஆண்டுகள் மகத்தான சேவையாற்றி உள்ளார்.
திருப்பூர்:
பிபின் ராவத் மறைவு தேசத்திற்கு மிகப்பெரும் இழப்பு. எனவே மத்திய அரசு இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமை அதிகாரி பிபின் லட்சுமண் சிங் ராவத் பாரத தேசத்தை காக்க 43 ஆண்டுகள் மகத்தான சேவையாற்றி உள்ளார். அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பை அகற்றி, முறியடித்து தேசத்தை பாதுகாக்க அவரது அனுபவமும், அறிவும் அரசுக்கு பெரும் உதவியாக இருந்தது.
உள்நாட்டு தேச துரோக சக்திகளையும், வெளிநாட்டு தேச விரோத சக்திகளையும் வேரும் வேரடி மண்ணுமாக இல்லாமல் செய்ய பாதுகாப்பு துறையை நவீனப்படுத்தி, முப்படைகளையும் ஒருங்கிணைத்து பலமான கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்.
இத்தகைய வீரத்திருமகன் விபத்தில் மறைந்தார் என்பது பாரத தேசத்திற்கு ஈடு செய்ய இயலா இழப்பு. அவருடன் அவரது மனைவி மதுலிகா மற்றும் தேசம் காக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்ற சேவை செய்ய வந்த 11 ராணுவ வீரர்களையும் இழந்து விட்டோம் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போன்ற கொடுமையான நிகழ்வாகும். அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை கண்ணீருடன் இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது.
இத்தகைய பேரிழப்பை தேசம் சந்தித்திருக்கும் வேளையில் ராணுவ தளபதியின் மரணத்தை வைத்து தேச நலனுக்கு எதிராக சமுக வலைதளங்களில் பதிவிடும் தேச துரோக புல்லுருவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.