உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம் - வீடு வீடாக சென்று பணியாளர்கள் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து மாநகராட்சி சுகாதார பிரிவினர் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மங்கலம் சுல்தான்பேட்டையில், 12 வயது சிறுவன் டெங்குக்கு பலியானதால் தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு பிரத்யேக வார்டு உருவாக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று சிட்கோ மீனாட்சிநகரை சேர்ந்த 7 வயது சிறுமி, காங்கயம் ரோட்டை சேர்ந்த 12 வயது சிறுமி, வேலம்பாளையம் நேரு வீதியை சேர்ந்த 17 வயது வாலிபர், லட்சுமி நகர் ராஜராஜன் வீதியை சேர்ந்த 8 வயது சிறுமி, கொடுவாயை சேர்ந்த 32 வயது பெண், அவிநாசி, வெங்கமேட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் ஊத்துக்குளி கருமாரம்பாளையத்தை சேர்ந்த 20 வயது வாலிபர், ஆண்டிபாளையத்தை சேர்ந்த 22 வயது ஆண் ஆகிய 8 பேர் தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி வார்டில் 25 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து மாநகராட்சி சுகாதார பிரிவினர் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கழிவு நீர் தேக்கம், குப்பை தேக்கம், மழை நீர் தேங்கி நிற்பது போன்றவை கண்டறியப்பட்டு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் பகுதிவாரியாக வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு புழு ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளனர். மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட 52-வது வார்டு பலவஞ்சிபாளையம், வள்ளலார் நகர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
டெங்கு கொசு புழு ஒழிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். குடியிருப்பு வாசிகளிடம் பேசிய அவர், ‘சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வது குறித்து அறிவுறுத்தினார்.