உள்ளூர் செய்திகள்
லஞ்சம் வாங்கி கைதான வருவாய் ஆய்வாளர் சிறையில் அடைப்பு
ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை முருகேசன் செந்தில்குமாரிடம் வழங்கியுள்ளார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் அலகுமலையை சேர்ந்தவர் முருகேசன்(வயது 36). லாரி உரிமையாளர். இவர் பொங்கலூர் பகுதியில் கிரவல் மண்ணை லாரிகளில் ஏற்றி சென்று விற்பனை செய்து வந்துள்ளார்.
இவரிடம் பொங்கலூர் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் (வயது38) என்பவர் லஞ்சமாக ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார். அதனை தருவதாக கூறிய முருகேசன் இது பற்றி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகாவிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அவரது ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை முருகேசன் செந்தில்குமாரிடம் வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.45 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.