உள்ளூர் செய்திகள்
பாபர் மசூதி இடிப்பு தினம்-திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சோதனை சாவடிகள், மாநகரின் முக்கிய இடங்கள், சாலை சந்திப்புகளில் போலீசார் தொடர் பாதுகாப்பிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
இந்த பாதுகாப்பு பணியில் மாநகரில் சுமார் 300-க்கும் அதிகமான போலீசார் ஈடுபட்டனர். தொடர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு சந்தேக நபர்களை பிடித்து விசாரித்தனர். திருப்பூரில் பழைய, புதிய பஸ் நிலையங்கள், கோவில்வழி, யுனிவர்செல் ரோடு பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி சந்திப்பு, குமரன் சிலை, சி.டி.சி. கார்னர், புஷ்பா ரவுண்டானா சந்திப்பு, உள்ளிட்ட முக்கிய இடங்களிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரெயில் மூலம் திருப்பூருக்கு வந்த பயணிகளின் உடைமைகள் கடும் சோதனை செய்யப்பட்டது. ரெயில் மூலம் அனுப்பப்படும் சரக்கு பார்சல்களும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.