உள்ளூர் செய்திகள்
சிதலமடைந்துள்ளதால் சிக்கி தவிப்பு-பல்லடத்தில் ஆம்புலன்ஸ் சாலை சீரமைக்கப்படுமா?
கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் சுமார் 600-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு சுமார் 30-க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்லடம்:
பல்லடம் நகரமானது கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் காவல் துறை அலுவலகங்கள், அரசு மருத்துவமனை,வங்கிகள்,வர்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதியில் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திருமணம் உள்ளிட்ட விசேச நாட்களில் வாகனங்கள் நகரை கடந்து செல்ல சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகும். மேலும் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் ‘திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது .கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு சுமார் 30-க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போக்குவரத்து நெரிசலால் பல நேரங்களில் உயிருக்குப் போராடும் நோயாளிகளை ஏற்றிவரும் ஆம்புலன்ஸ்களும், சிக்கித்தவிக்கின்றன. இதனால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்காக போக்குவரத்து போலீசார் தடுப்புகளை வைத்து ரோட்டின் ஓரத்தில் தனியாக வழி ஏற்படுத்தி உள்ளனர்.
ஆனால் அந்த ரோடு குண்டும், குழியுமாக, இருப்பதால் அந்த ரோட்டை கடக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றது. இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-
பல்லடம் நால்ரோடு பகுதியில் ஏராளமான வாகனங்கள் செல்வதால், ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்தநிலையில், போக்குவரத்து சிக்னல், விழுந்தால், வாகனங்கள் கிலோமீட்டர் கணக்கில் நிற்கிறது. இதனால் ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு வழி இல்லை.
இதற்காக போக்குவரத்து போலீசார் நால்ரோடு பகுதியில் ஆம்புலன்ஸ் செல்வதற்காக தடுப்புகள் வைத்து, சுமார் 200 அடி தூரத்திற்கு வழித்தடம் பிரித்து ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி செய்துள்ளனர். ஆனால் அந்த ரோடு, மிகவும் மோசமாக உள்ளது.
எனவே அந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.