உள்ளூர் செய்திகள்
சாலை விபத்தால் பாதித்த குடும்பங்களுக்கு ரூ.7 கோடி நிவாரண உதவியை விரைந்து வழங்க வேண்டும்- நுகர்வோர் விழிப்பணர்வு இயக்கம் வலியுறுத்தல்
சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நிவாரணம் கேட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
திருப்பூர்:
சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.7 கோடி அளவிலான நிவாரண உதவி வழங்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்பணர்வு இயக்க தலைவர் மணிக்குமார் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதிய அரசாணைப்படி சாலை விபத்து உயிரிழப்புக்கு ஒரு லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நிவாரணம் கேட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
திருப்பூர் கோட்டத்தில் மட்டும் 2017-ம் ஆண்டு முதல் ரூ.3 கோடி அளவுக்கு நிவாரண உதவி வழங்கப்பட வேண்டியுள்ளது.
சாலை விபத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு விண்ணப்பித்த 5 மாதங்களுக்குள் நிவாரணம் வழங்குவது உதவியாக இருக்கும். மாறாக ஆண்டு கணக்கில் நிலுவையில் வைத்து வழங்கப்படாமல் இருக்கிறது.
மாவட்டத்தில் திருப்பூர், தாராபுரம், உடுமலை ஆகிய 3 வருவாய் கோட்டங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை பரிசீலித்து, ரூ.7 கோடி மதிப்பிலான நிவாரண உதவியை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.