உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் போதைக்காளான் விற்க முயன்ற 3 பேர் கைது
கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தில் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்க முயன்ற 3 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைக்கிராமங்களில் கடந்த சில தினங்களாக கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் சிறப்பு குழு அமைத்து கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதை காளான் விற்க முயன்ற 3 பேர்களை சிறப்பு குழு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அவர்கள் வைத்திருந்த பையினை சோதனை செய்யும் போது போதைக்காளான் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மன்னவனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் அழகர் (42), மணிகண்டன் அழகுமலை (32), தங்கமணி (35) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து ரூ.10,000 மதிப்பிலான போதைக்காளான்களை பறிமுதல் செய்தனர்.