உள்ளூர் செய்திகள்
அதிமுக தலைமைத் தேர்தல்- தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் வருகிற 7-ந்தேதி நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை நேற்று அறிவித்தது. இந்த தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. அதன்படி இன்று மதியம் விசாரணை நடைபெற்றது. அப்போது அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட கே.சி.பழனிசாமி வழக்கு தொடர உரிமை இல்லை என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட உயர் நீதிமன்றம் அ.தி.மு.க. தலைமைக்கான தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக நிரூபிக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்ய தயங்க மாட்டோம் என நீதிபதி தெரிவித்தார்.
மேலும், தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... டி.என்.பி.எஸ்.சி. முதன்மை தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்- ராமதாஸ் அறிக்கை