உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து
ஆத்திரமடைந்த விஸ்வநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோலை ராஜாவின் மார்பில் குத்தி உள்ளார்.
பல்லடம்:
பல்லடம் பனப்பாளையம் பகுதியில் ஓட்டல் கடை நடத்தி வருபவர் சோலைராஜா (வயது 48). இவரது ஓட்டலுக்கு பொக்லைன் எந்திர ஓட்டுனரான விஸ்வநாதன் (30) சாப்பிட வந்தார்.
பின்னர் விஸ்வநாதன் சாப்பிட்டுவிட்டு கணக்கு கேட்டுள்ளார். அப்போது பாக்கித் தொகை ரூ.500 ஆகிவிட்டது. எனவே இனிமேல் சாப்பிட்டால் பணம் தர வேண்டும் என சோலைராஜா கூறியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
ஆத்திரமடைந்த விஸ்வநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோலை ராஜாவின் மார்பில் குத்தி உள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே ஓட்டலில் உள்ளவர்கள் விஸ்வநாதனை பிடித்து தாக்கினர்.
இதில் அவரும் காயமடைந்தார். பின்னர் இருவரையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.