உள்ளூர் செய்திகள்
குமாரபாளையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
குமாரபாளையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே உள்ள எதிர்மேடு ஜே.கே.கே. ஆசிரியர் குடியிருப்பில் வசிப்பவர் சுரேஷ் (வயது 34). இவர் வெளியூரில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா (26). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. கவிதா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி கவிதா மருத்துவம் பார்ப்பதற்காக தாய்வீடு உள்ள காஞ்சி கோவில் சென்றிருந்தார். பின்னர் 4 நாட்கள் கழித்து அவர் நேற்று காலை கணவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த ரூ.9 ஆயிரம் மற்றும் கால் மெட்டி, தோடு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கவிதா குமாரபாளையம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.