உள்ளூர் செய்திகள்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒமிக்ரான் வைரஸ்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்-மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2021-12-03 04:42 GMT   |   Update On 2021-12-03 04:42 GMT
ஒமிக்ரான் வைரஸ் மாதிரி ஆய்வுகளின் முடிவில் ஒமிக்ரான் வைரஸ் உறுதி என்றால், அரசு முறைப்படி தெரிவிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா தொற்று உருமாற்று புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நவடிக்கைகள் குறித்து சென்னை தேனாம்பேட்டையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கொரோனா பரவிய நாடுகள் மட்டுமின்றி மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளையும் கண்காணிக்கிறோம்.

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியது. ஆனால் யாரும் பீதியடைய வேண்டாம். ஒமிக்ரான் வைரசை கண்டுபிடித்த மருத்துவரே ஒமிக்ரான் பற்றி அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு ஒமிக்ரான் இருப்பது உறுதியாகவில்லை. அவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதனால், தமிழகத்தில் இன்னும் ஒமிக்ரான் தொற்று பரவவில்லை.

மேலும், பிரிட்டனில் இருந்த சென்னை வந்த குடும்பத்தில் 10 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவரது மாதிரியும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை, திருச்சியில் ஒமிக்ரான் உறுதியானதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலில் உண்மை இல்லை. ஆய்வின் முடிவில் ஒமிக்ரான் வைரஸ் உறுதி என்றால் அரசு முறைப்படி தெரிவிக்கும். அதுவரை யாரும் வதந்தி பரப்ப வேண்டாம்.

கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள விமானப் பயணிகளுக்கு அரசே கட்டணத்தை ஏற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. 2-வது டோஸ் செலுத்தி 5 மாதங்களுக்கு பின்னர் மாடர்னா தடுப்பூசிக்கு அதிக செயல்திறன்
Tags:    

Similar News