உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளிகளில் பயிலும் மாற்றுதிறன் மாணவர்களின் விபரம் இணையதளத்தில் பதிவேற்றம்
மாற்றுத்திறன் குழந்தைகள் சுய விபரங்கள் மாற்றுத்திறன் நல அலுவலகங்களில் மட்டுமே முழுமையாக கிடைக்கும்.
திருப்பூர்:
கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் எமிஸ் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் எமிஸ் எண் வழங்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணை குறிப்பிட்டாலே மாணவர் ஏற்கனவே படித்த விபரங்கள், தற்போதைய வருகைப்பதிவு, முகவரி மற்றும் தொடர்பு எண்ணை அறிந்து கொள்ளலாம். இதில் மாற்றுத்திறன் மாணவர்கள் எனில் அதுகுறித்த குறிப்பு மட்டும் இடம்பெறுவது வழக்கம்.
தற்போது எந்த மாதிரியான குறைகள், அவர்களின் சுய விபரங்கள் அனைத்தையும் எமிஸில் பதிவேற்ற கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதாமணி கூறுகையில்:
மாற்றுத்திறன் குழந்தைகள் சுய விபரங்கள் மாற்றுத்திறன் நல அலுவலகங்களில் மட்டுமே முழுமையாக கிடைக்கும். தற்போது எமிஸ் தளத்திலேயே பெயர், பிறந்தநாள், முகவரி, பெற்றோர்/ பாதுகாவலர் விபரம், மருத்துவ ரீதியான குறிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
குடும்ப பின்னணி, மருத்துவ அறிக்கைகள் சம்பந்தமான புகைப்படங்கள் பயனடைந்து வரும் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், சிகிச்சைக்கான திட்டங்கள் குறித்து அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
பொதுத்தேர்வு சமயங்களில் மாற்றுத்திறன் மாணவர்கள் சிறப்பு அனுமதி கோரி விண்ணப்பிப்பது வழக்கம். தற்போது எமிஸிலேயே இத்தகவல்கள் பதிவேற்றப்படுவதால் எளிதாக பெற முடியும் என்றார்.