உள்ளூர் செய்திகள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் 9-ந் தேதி வெளியீடு

Published On 2021-12-01 18:52 GMT   |   Update On 2021-12-01 18:52 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் 9-ந் தேதி வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிக்குமார் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வருகிற 9-ந் தேதி வெளியிடப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் நகல் வழங்குதல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்தல், மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம், வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சாய்தள நடைமேடை அமைத்தல், முதியோர்களுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், அதுபோன்ற வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை நேரலையாக கண்காணித்தல், நுண் மேற்பார்வையாளர்களை நியமனம் செய்தல், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், வாக்கு எண்ணும் மையங்களை இறுதி செய்தல், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களின் இருப்பை உறுதிசெய்தல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆணைய செயலாளர் ஏ.சுந்தரவல்லி, பேரூராட்சிகளின் ஆணையர் ஆர்.செல்வராஜ், நகராட்சி நிர்வாக ஆணையர் பா.பொன்னையா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு வார்டு எண்ணிக்கையை நிர்ணயம் செய்தல் தொடர்பான வார்டு மறுவரையறை கூட்டம் நடைபெற்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News