உள்ளூர் செய்திகள்
மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட பீரோ

ராணுவ வீரர் வீட்டில் 11½ பவுன் நகைகள் திருட்டு- பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

Published On 2021-12-01 10:20 GMT   |   Update On 2021-12-01 10:20 GMT
பட்டப்பகலில் ராணுவ வீரர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தோகைமலை:

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லடை வடக்கு தெருவை சேர்ந்தவர் தாமஸ் (வயது 42). ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சேசு (55). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று சேசு வழக்கம்போல வேலைக்கு சென்றாா். அன்று காலை அவருடைய மனைவி ஆடு, மாடுகளை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றிருந்தார். பின்னர் மதியம் 1 மணியளவில் ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த சங்கிலி, வளையல், மோதிரம் உள்பட 11½ பவுன் நகைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தோகைமலை போலீசில் சேசு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் அதுவும் ராணுவ வீரர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News