உள்ளூர் செய்திகள்
ஊத்துக்குளி ரோட்டில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதிமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 33-வது வார்டு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், மேலும் சில பகுதிகளில் சாக்கடை கால்வாய் தூர் வாராமல் உள்ளதால் மழை நேரங்களில் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்து உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே இவற்றை சரிசெய்து சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதிமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை அந்தபகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி திடீரென ஊத்துக்குளி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் கொசு மருந்து அடித்து கொசு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.